Powered By Blogger

Oct 18, 2015

அப்பா மகள் பாசம்

"முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்பது மகள்களை பெற்றெடுத்த அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்..." இயக்குனர் ராமின் குரலில் உலகமெங்கும் அப்பா - மகள் பாசத்தை பறைசாற்றிய "தங்க மீன்கள்" திரைபடத்தில் இடம்பெற்ற வசனம். ஆம், அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்தா சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.

ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.... நிறையவே இருக்கிறது..

தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.

மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.

மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், "முடியாது.." என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.

No comments:

Post a Comment