Powered By Blogger

Jul 23, 2015

மனைவி அமைவதெல்லாம்!

மனைவி அமைவதெல்லாம்! (முழுவதும் படிக்கவும் )

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!

இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!

எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!

எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .

ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!

இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?

எதுக்கு வாங்குனீங்க..?

இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?

எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!

(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!

இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?

ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!

அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?

சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?

யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?

எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்

இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா

நானும் அவளிடம் கேட்கிறேன்

உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு

அதெல்லாம் ஒன்னும் வேணாம்

இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்

பிடிக்குமென சிலதை சொல்ல

முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?

ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.

அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .

நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!

சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!

சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!

தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ...

ஆயுள் காப்பீடு அவசியமான ஒன்று

����������������������

ஆயுள் காப்பீடு அவசியமான ஒன்று
������������������

அவசியமற்ற விஷயங்களில் தாராளம் காட்டும் நம்மில் பலர், அவசியமான விஷயங் களில் கையை சுருக்கிக்கொள்கிறோம். அப்படி அவசியமான, ஆனால் பலரும் அலட்சியமாக நினைக்கும் ஒன்றுதான் ஆயுள் காப்பீடு.

ஆயுள் காப்பீடு அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காப்பீட்டு முகவர்கள் கூறினால், வியாபாரத்துக்காக கூறுகிறார்கள் என்று சாதாரணமாக ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் ஆயுள் காப்பீடு என்பது நிச்சயம் அவசியமான ஒன்று.

ஆயுள் காப்பீடு ஏன் அவசியமானது?

நம் வாழ்வில் எப்போதும், எல்லாம் சீராக நடக்க வேண்டும், நமக்கு எந்த அசம்பாவிதமும் நேரக் கூடாது என்று எண்ணுகிறோம். பெரியவர்கள் வாழ்த்தும்போது கூட, ‘தீர்க்காயுசா இரு’ என்று வாழ்த்துகிறார்கள். ஆனால் எவருக்குமே உத்தரவாதமான ஆயுட்காலம் இல்லை.

அப்படி அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால், சம்பந்தப்பட்டவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்படாமல் தாங்குவதுதான் ஆயுள் காப்பீடு.

ஒரு மனிதர் நீண்ட நாட்கள் வாழ நினைப்பதே, தனது குடும்பத்தினர் தடுமாறாத நிலையை அடைய வைக்க வேண்டும் என்பதற்குத்தானே! அப்படி நினைக்கும் ஒருவர், தனக்கு ஏதாவது நேர்ந்தால் கூட தனது குடும்பத்தினருக்கு பொருளாதார நிம்மதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும் இயல்புதானே?

அங்கேதான் கைகொடுக்கிறது, ‘லைப் இன்சூரன்ஸ்’ எனப்படும் ஆயுள் காப்பீடு.

பலர் கூடியிருக்கும் கூட்டத்தில், ஆயுள் காப்பீடு குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்டால் ஏறக்குறைய எல்லோருமே தெரியும் என்று கை தூக்குவார்கள். ‘ஆகா, இவ்வளவு பேர் விஷயம் தெரிஞ்சவங்களா இருக்காங்களேன்னு சந்தோஷத்துடன், ‘எத்தனை பேர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கீங்க?’னு கேட்டால் உங்கள் சந்தோஷம் உடனடியாய் வடிந்துவிடும்.

இந்தியா முழுவதும் வெறும் 5 சதவீதம் பேர்தான் இன்சூரன்ஸ் பாலிசி பெற்றிருக்கிறார்களாம். ஆக இன்னும் எத்தனை கோடி பேர் காப்பீடு பெற வேண்டியிருக்கிறது!

வெளிநாடுகளில் எல்லாம் மக்கள் அவர்களே விருப்பப்பட்டு இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். அங்கே ஆயுள் காப்பீடு முதல் மருத்துவக் காப்பீடு வரை எல்லாம் வெகு இயல்பானவை. ஆனால் நம் நாட்டில் இன்னும் இன்சூரன்ஸ் எடுக்க வற்புறுத்த வேண்டியிருக்கிறது.

ஆயுள் காப்பீடு என்பதே, தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு, தான் இல்லாமல் போனாலும் நிதிப் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுப்பதுதான். அந்தப் பாதுகாப்பை போதுமான அளவுக்கு ஒருவர் செய்திருந்தார் என்றால், அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் கூட, அவரை நம்பி இருக்கும் குடும்பம் தற்போது வாழும் அதே வாழ்க்கையைத் தொடரமுடியும்.

வாழ்க்கையில் முன்னேற்றம் காண அவகாசம் கிடைக்கும். அதன் மூலம், அந்த குடும்பமும் ஒரு கட்டத்தில் மேலே வந்துவிடும். இப்படி, ஆபத்பாந்தவனாகத் திகழ்வதுதான் ஆயுள் காப்பீடு.

ஆனால் நம்மூரில் பலர், இன்சூரன்ஸை பாதுகாப்பாகக் கருதாமல் முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். ‘வருமான வரி கட்ட வேண்டியிருக்கும். அதனால் ஒரு பாலிசி போட்டேன், இப்போ ஒரு பாலிசி எடுத்தா 15 வருஷம் கழிச்சு மூணு லட்ச ரூபாய் கிடைக்கும்னு சொன்னாங்க…’ என்றெல்லாம் பாலிசி எடுப்பவர்கள் தான் அதிகம்.

எது எப்படியிருந்தாலும், பாலிசி எடுப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான்!

������������

Jul 21, 2015

விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகள் (Sales Promotions)

விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகள் (Sales Promotions)

நிறுவனங்கள் பல சமயங்களின் விற்பனையை உயர்த்த சில சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கின்றன. இவையே Sales Promotions என்று குறிக்கப்படுகின்றன. இவை இரண்டு வகைப்படும் -வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள்(Consumer Promotions) மற்றும்விற்பனையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள்(Trade Promotions). வாடிக்கையாளர்களை முதல்முறையாக தங்கள் பொருட்களை வாங்க வைக்கும் நோக்கத்திலோ, அல்லது ஏற்கெனவே வாங்குபவர் என்றால் கூடுதலாக வாங்க வைக்கும் நோக்கத்திலோ வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விற்பனையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகளின் நோக்கம், அவர்களிடையே நமது பொருட்களை தீவிரமாக விற்கின்ற முனைப்பை ஏற்படுத்தவே ஆகும். பல சமயங்களில் தேக்கம் கண்டுள்ள சரக்கினை 'தள்ளி விடுவதற்காக'வும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் நாம் காணும் முடிவுகள் ஆச்சர்யமளிக்கக் கூடும். எழுபது முன்னணி நிறுவனங்களின் மார்க்கெட்டிங் செலவுகளை ஆராய்ந்த இந்த சர்வேயில், ஒரு நிறுவனத்தில் சற்றேறக் குறைய 73% இத்தகைய விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளுக்கே பணம் செலவிடப்படுகிறது. மீதம் 27% தான் நேரடியான விளம்பரங்களுக்கு செலவிடப்படுகிறது. எனவே இத்தகைய நடவடிக்கைகளின் முக்கியத்துவம் புலப்படும். 

இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு தகவல் என்னவென்றால் பல சமயங்களில் விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளும் விளம்பரங்களும் இணைந்தே வேலை செய்கின்றன. ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் இரண்டையும் செய்யும் போது அவற்றின் பலன் முழுமையாகக் கிடைக்கிறது. 

பல்வேறு வகையான விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகள் எவை என்று கீழே காணலாம். 

வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள்: 

ஏற்கெனவே சொன்னது போல், வாடிக்கையாளர்கள் முதல்முறையாக பொருளை நுகரும் பொருட்டும், பயன்படுத்தி விலகிச் சென்றவர்கள் மீண்டும் வாங்கும் பொருட்டும், அதிக அளவில் வாங்குவதைத் தூண்டும் பொருட்டும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெகு சில சமயம், பிராண்டின் மதிப்பைக் கூட்டும் வகையிலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். இவற்றில் பல வகைகள் உண்டு: 

** கூப்பன்கள் (Coupons) - 'இந்த கூப்பனைக் கத்தரித்து எடுத்து கடையில் கொடுத்தால் லக்ஸ் சோப் மீது இரண்டு ரூபாய் தள்ளுபடி பெறலாம்' என்று நீங்கள் செய்தித்தாளிலோ அல்லது பத்திரிக்கைகளிலோ பார்த்திருக்கலாம். இதுவே பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்த விற்பனை உயர்த்தல் நடவடிக்கை ஆகும். இப்போதெல்லாம் நேரடியாக தபாலில் (Direct Mailer) ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாகக் கூப்பன்கள் அனுப்புகிறார்கள். சில சமயங்களில் நாம் வாங்கும் பொருளின் உறை மேலேயே இம்மாதிரி கூப்பன்கள் இருக்கும். இவை மறு-வாங்குதலைத் (Re-purchase) தூண்டும் பொருட்டு வடிவமைக்கப்படுகின்றன. இப்படி இல்லாமல் பொதுவான ஊடகங்களின் வாயிலாக அளிக்கப்படும் கூப்பன்கள் புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்து அவர்களை நமது பொருளை வாங்கத் தூண்டும் வகையில் (Trial Inducement) வடிவமைக்கப்படுகின்றன. சில சமயங்களில் தொடர்புடைய பொருளை வாங்கும் போது வேறு பொருளுக்கான கூப்பன்கள் அளிக்கப்படலாம். உதாரணமாக குழந்தைகளுக்கான டயப்பர் (diaper) வாங்கும்போது குழந்தைகளுக்கான சோப் அல்லது ஷாம்பூவுக்கு கூப்பன் அளிக்கப்படும். இது க்ராஸ்-ரஃப் கூப்பன் (Cross-ruff coupon) என்று அழைக்கப்படுகிறது. சில சமயங்களில் தள்ளுபடியைத் தவிர நமது பொருளுக்கு உபயோகமான சேவையை இலவசமாக வழங்குவதும் உண்டு. கார் வாங்குபவர்களுக்கு கூப்பன் அனுப்பி, அதன் மூலம் குறிப்பிட்ட சர்வீஸ் ஸ்டேஷன்களில் இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்று வழங்கப்படுவது இம்மாதிரியே. நான் இதுவரை அறிந்த கூப்பன் திட்டங்களில் மிக சுவாரஸ்யமானது எதுவென்றால் ஒரு பல்பொருள் அங்காடியிலே ஒரு நிறுவனம், தனது போட்டியாளர்களின் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களைக் குறிவைத்து, அவர்களின் பில்லின் கீழே மட்டும் தங்களது பொருளை வாங்குவதற்கு தள்ளுபடி அறிவிக்கும் கூப்பனை இணைத்து அளித்தது. இதன் மூலம் எத்தனை பேர் போட்டியாளர்களின் பொருளை விட்டுவிட்டு தங்கள் பொருளினை வாங்குகிறார்கள் எனவும் எளிதாகக் கண்டறிந்தது. 

** இலவச சாம்பிள் (Free Samples) - புதிய வாடிக்கையாளர்களைக் கவர மிகச் சிறந்த (ஆனால் செலவு கூடுதலான) வழிவகை அவர்களுக்கு சிறிய அளவுகளில் இலவச சாம்பிள்கள் வழங்குவது ஆகும். மக்கள் போக்குவரத்து மிகுந்த இடத்தில் நின்று கொண்டு கைப்பட எல்லோருக்கும் தரலாம். அல்லது அலுவலகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களுக்குப் போய் விநியோகம் செய்யலாம். அல்லது பத்து லட்சம் பிரதிகள் (??!!) விற்பனையாகும் முதன்மையான தமிழ்ப் பத்திரிக்கையுடன் இலவச இணைப்பாக அளிக்கலாம். முற்றிலும் புதிய பொருளை சந்தையில் அறிமுகம் செய்யும் போது இது மிகவும் பலனளிக்கிறது. கை நீட்டி வாங்கிய பொருளை எப்படியாவது பயன்படுத்திப் பார்ப்பது என்பது மக்களின் மனப்பான்மையில் ஊறிப் போன விஷயம் என்ற அடிப்படையில் இந்த வழி பயன்படுத்தபப்டுகிறது. 

** சிறப்பு உறைகள் (Special Packs) - 'இப்போது அதே விலையில் 20% எக்ஸ்ட்ரா கோல்கேட்' என்றோ அல்லது 'இரண்டு க்ளினிக் ப்ளஸ் ஷாம்பூ பாட்டில் வாங்கி ஐந்து ரூபாய் சேமியுங்கள்' என்று பார்க்கிறீர்கள் அல்லவா? அவையெல்லாம் இந்த சிறப்பு உறைகளின் அடிப்படியிலே வழங்கப்படுகின்றன. இவை, மற்ற பிராண்டிலிருந்து நமது பிராண்டுக்கு மாறச் செய்யவும் (Switching), அதிக விசுவாசத்தை ஏற்படுத்தவும் (Creating Loyalty) உதவுகின்றன. 'அதே விலைக்கு எக்ஸ்ட்ரா' என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு முறையாகும். 

** பரிசுகள் (Gifts) - பொருளை வாங்கும் அனைவருக்கும் இலவசமாக ஏதாவது பரிசுப் பொருள் கொடுப்பது இந்தமுறையில் அடங்கும். சில சமயங்களில் எல்லா பொருளுக்கும் பரிசு உண்டு (Attached to each product). சில சமயம் குறிப்பிட்ட அளவு பொருட்களை வாங்கி அதற்கு நிரூபணம் அளித்து (proof of multiple purchase) பரிசினைப் பெறலாம். குழந்தைகளை மையப்படுத்திய பொருட்களில் இது போன்ற பரிசுகள் நன்றாக வேலை செய்கின்றன என்பது அனுபவத்தின் வாயிலாக நாம் அறிவது. 

** குலுக்கல் முறை பரிசு (Sweepstakes) - பொருளை வாங்குபவர்கள் அனைவரும் ஒரு குலுக்கலில் கலந்து கொண்டு அவர்களில் குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து பரிசு அளிப்பது இந்த வகை ஆகும். சில சமயம் பொருளை வாங்கினால் மட்டும் போதும். சில சமயம் ஏதாவது வாசகத்தைப் பூர்த்தி செய்து அல்லது 'இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் உதடுகள் எந்த நடிகையுடையவை' போன்ற கேள்விக்கு பதில் அளித்து குலுக்கல் திட்டத்தில் கலந்து கொள்ளலாம். எல்லோருக்கும் பரிசு கொடுக்கும் போது மிகக் குறைந்த விலை ப்ரிசையே அளிக்க முடியும். இந்த வழியில் மிக விலை உயர்ந்த பரிசுகளை அளிக்க முடியும். 

** வாங்குவதற்கு நிதி உதவி (Purchase Financing) - விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது தவணை முறைத் திட்டம், வட்டியில்லாக் கடன் போன்ற நிதி உதவிகளை அளிப்பதும் ஒரு வகை விற்பனை உயர்த்தல் நடவடிக்கையே ஆகும். இந்தியாவில் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் சந்தையில் (அண்மைக் காலங்களில் செல்ஃபோன் விற்பனையிலும்!!) இத்தகைய நிதி உதவி திட்டங்கள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. 

விற்பனையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள்: 

இவ்வகை நடவடிக்கைகளின் நோக்கங்கள் - அதிக அளவில் பொருளை கடையில் அடுக்க முனைதல், அதிக அளவில் விற்க வைக்க முனைதல் போன்றவை ஆகும். இவற்றின் சில வகைகளை கீழே காணலாம்: 

** இன்வாய்ஸ் தள்ளுபடி (Off-Invoice)- மிக எளிமையான வழியான இதில், விற்பனையாளர் பெற்றுக் கொள்ளும் சரக்கின் விலையில் குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த வழியில் உள்ள சிறிய குறை என்னவென்றால், விற்பனையாளர்கள், அடுத்து இத்தகைய விற்பனை உயர்த்தல் நடவடிக்கை வரைக்கும் தாங்கும் அளவுக்கு இப்போதே வாங்கி அடுக்கிக் கொள்வார்கள். விற்கும் போது விற்றுக் கொள்ளலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு. இதனைத் தவிர்க்க, வேறு வகைகளில் இதே போன்ற சலுகை அளிக்கப்படுகிறது. உதாரணமாக பன்னிரெண்டு பொருட்களை விற்றால் ஒரு பொருள் இலவசமாக விற்பனையாளருக்கு அளிக்கப்படும். அதன் விலை முழுவதும் அவருக்கு இலாபமாகி விடும். 

** காட்சிக்கு வைப்பதற்கு சலுகை (Display Allowance) - விற்பனையாளர் தனது கடைகளில் குறிப்பிட்ட பொருளை முன்னிறுத்தி காட்சிக்கு வைக்க சம்மதிப்பதன் பேரில் இத்தகைய சலுகைகள் அளிக்கப்படுகின்றன. 

** தாமதமான பில்லிங் (Delayed Billing) - விற்பனையாளர் பொருளை வாங்குவதற்கான செலவுகளைக் குறைக்கும் வகையில் நமது பில்லை அனுப்புவதை சற்று தாமதப்படுத்தலாம். விற்பனையாளரின் பணச்சுழற்சிக்கு இது உதவுகிறது. 

** குலுக்கல் முறைப் பரிசுகள் (Sweepstakes) - அதிக அளவில் விற்பனையைத் தேடித் தரும் விற்பனையாளர்களுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலோ அல்லது குலுக்கல் முறையிலோ பரிசுகள் வழங்கப்படும். 

குறுகிய கால அடிப்படையில் இத்தகைய விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகள் பயன் அளிக்கின்றன என்றாலும் கூட, அதிக அளவில் (அடிக்கடி) இவற்றை மேற்கொள்வது பாதிப்பான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். சில சமயம் வாடிக்கையாளர்கள், 'இது எதனா சலுகை தரும் போது வாங்கிக்கலாம், இப்ப வேணாம்' என்று நினைக்கும் அளவுக்குப் போகக் கூடும். எனவே விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளைத் தேவையான அளவுக்கு மட்டுமே, அதுவும் சரியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்.