Powered By Blogger

Nov 27, 2016

The Power of Positive Thinking

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்தித்தார். புலம்பினார்.

தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்களே நடக்கவில்லை என்றும், தான் செய்யும் செயல்கள் அனைத்தும் துன்பமாகவே முடிகிறது என்றும் பீலேவிடம் சொல்லி வருந்தினார்.

பீலே அவரிடம் ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார். கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும், கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து, வரிசைப்படுத்தி அதில் எழுதச்சொன்னார்.

வந்தவரோ “என் வாழ்க்கையைப் பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு என்று ஒன்றுமே இல்லை, வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டே அந்த துண்டுக் காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து பீலே காகிதத்தை அவரிடமிருந்து வாங்கிப் பார்த்த போது அந்த மனிதர் சற்று முன்பாக சொன்னது போலவே அக்காகிதத்தின் வலது பக்கம் முழுவதும் காலியாகவே இருந்தது.

இப்போது பீலே அவரிடம் சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

அந்தக் கேள்விகளும் பதில்களும் இதோ;-

“உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?”
"எனது மகன் இதுவரை ஜெயிலுக்கே போனதே இல்லையே"

“உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?”
"இல்லையே, என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள்"

“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?”
"சாப்பிடாமல் நான் ஒரு நாளும் இருந்ததில்லை"

“உங்கள் வீடு வெள்ளத்தில் இழுத்து சென்றபோது என்ன செய்தீர்கள்?”
"என் வீடு பத்திரமாகத்தான் இருக்கிறது"

" உங்களுக்கு சாலைவிபத்தில் கால் உடைந்ததே, எலும்பு சேர்ந்து விட்டதா?"
"எனக்கா? விபத்தா? அப்படி ஏதும் எனக்கு நேரவில்லையே?"

இப்படி பீலே ஒவ்வொரு கேள்வியாக கேட்கக் கேட்க அந்தக் கோட்டின் வலது புறம் நிரம்பிக் கொண்டே வந்தது. காகிதத்தின் இடது பக்கத்தில் எழுத இன்னும் நிறைய இடமிருந்தது.

தற்போது பீலே கேட்டார்;-

“இவை எல்லாம் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. ஏன் வலது பக்கம் நீங்கள்  எழுதவில்லை? ”.

நாமும் பீலேயைச் சந்திக்க வந்த நபரைப் போலத்தான் நடந்து கொள்கிறோம், இல்லையா?

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளை மட்டுமே கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. இருக்கவும் முடியாது.

அதே போல முழுக்க முழுக்க துன்ப மயமான நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்று இவ்வுலகில் யாரும் இல்லை. இருக்கவும் முடியாது.

இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் வாழ்வின் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கில்
எடுத்துக் கொண்டு பலர் தங்களுடைய
வாழ்க்கையை தாங்களாகவே வீணடித்துக் கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் ஒரு ஜன்னல் சார்த்தப்படும் போது சோர்வடைய வேண்டாம். மற்றொரு கதவு உங்களுக்காக வேறு இடத்தில் திறந்தபடி காத்திருக்கும்.

கடந்த காலம் நமக்கு ஒருபோதும் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக்கூடாது. மாறாக அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் ஒரு தள்ளு பலகையாக மட்டுமே இருக்க வேண்டும்.

என்ன நடந்தாலும் சரி, வாழ்க்கையை நான் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று உறுதியோடு இன்றே துணிந்து முடிவெடுங்கள். மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக என்றும் இருக்கட்டும்.

மகிழ்ச்சியாய் எழுதத் தொடங்குங்கள்.

வலது பக்கம் முழுவதும் நிரம்பட்டும்.
இடது பக்கம் எப்போதும் காலியாக இருக்கட்டும்.

வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்.

No comments:

Post a Comment